திமுக சொன்னதைக் கேட்காத விஜயகாந்த் சொல்வதை திமுக கேட்குமா...?
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முன்பு திமுக கூறியபோது அதை ஏற்காமல் நிராகரித்தவர் தேமுதிக விஜயகாந்த். ஆனால் தற்போது உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதை திமுக ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் மட்டுமே களத்தில் உள்ளன. திமுக, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்து விட்டன.
இதில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. திமுக யாருக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் அனைவரும் அதிமுகவின் முறைகேடுகளை எதிர்க்க ஓரணியில் திரள வேண்டும் என்று விஜயகாந்த் ஒரு அறிக்கை விட்டு எல்லாக் கட்சிகளையும் குறிப்பாக திமுகவை யோசிக்க வைத்துள்ளார்.
விஜயகாந்த் சொல்ல வருவது என்னவென்றால்
உண்மையில் அதிமுகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றுதான் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதாவது தற்போது களத்தில் உள்ள பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே அவரது அறிக்கையின் உள்ளர்த்தமாக பார்க்கப்படுகிறது.
பாடம் கற்பிக்க விரும்பும் விஜயகாந்த்
லோக்சபா தேர்தலில் பட்ட அடியிலிருந்து இன்னும் கூட எந்தக் கட்சியும் மீளவில்லை. இந்த நிலையில் அதிமுகவுக்கு கொஞ்சமாவது வலியைத் தந்து அதற்கு தலையில் குட்டு வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் விஜயகாந்த். இதற்காகத்தான் ஊர் கூடி தேர் இழுக்க வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சேர்ந்தால் நெருக்கடி தரலாம்
அதிமுகவை அத்தனைக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கும்போது நிச்சயம் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படும். அனைத்து இடங்களிலும் இல்லாவிட்டாலும் கூட கணிசமான நெருக்கடியைக் கொடுத்து சில இடங்களில் தோல்வியையும் பரிசாகக் கொடுக்க முடியும் என்பது விஜயகாந்த்தின் கணக்கு. இதற்கு அனைவரும் பாகுபாடு பார்க்காமல் ஒருங்கிணைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.
கோவை - தூத்துக்குடியில் ஆப்பு வைக்கலாம்
முக்கியமாக கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவுக்கு சற்று ஆதரவு அதிகம் உள்ள கோவையிலும், திமுகவுக்கு சற்று பலம் காணப்படும் தூத்துக்குடியிலும் அதிமுகவை மேயர் இடைத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்க முடியும் என்று விஜயகாந்த் கருதுகிறார். இதற்கு திமுகதான் முக்கியமாக முன்வர வேண்டும் என்று விரும்புகிறாராம் விஜயகாந்த்.
யோசனையில் திமுக
விஜயகாந்த்தின் இந்த திட்டம், யோசனை குறித்து திமுக தலைமைக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாம். கட்சித் தலைமையும் தீவிரமாக யோசித்து வருகிறதாம்.
ஆனால் ஏற்காட்டில் கைவிட்டவராச்சே விஜயகாந்த்
ஆனால் திமுக மனதை நெருடும் ஒரு விஷயம் என்னவென்றால், ஏற்காடு இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக திமுகவை ஆதரிக்குமாறு விஜயகாந்த்துக்கு திமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. அப்போது அவர் அதை ஏற்கவில்லை என்பதுதான்.
கருணாநிதி கையில் முடிவு
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலைப் போல இல்லாமல் இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியே முக்கிய முடிவுகளை எடுத்து வருவதால் விட்டுக் கொடுத்துப் போவதில் தவறில்லை என்ற எண்ணம் கொண்ட கருணாநிதியின் கையில் திமுகவி்ன் சமீபத்திய முக்கிய முடிவுகள் இருந்து வருவதால் கருணாநிதியின் எண்ண ஓட்டம் நமக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவினர் உள்ளனராம்.
அரசியல்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாறாதது மாற்றம் ஒன்று மட்டும்தானே!