ஆக.2-ல் கச்சத்தீவில் தஞ்சமடைந்து இலங்கையிடம் சரணடையும் போராட்டம்- ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
ராமேஸ்வரம்: இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆகஸ்ட் 2-ந் தேதியன்று இலங்கையிடம் சரணடையும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றது. 45 நாள் தடைகாலம் முடிந்து சென்ற மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ததுடன் படகுகளை விடுதலை செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிசிடமும் தமிழக மீனவர்களை கைது செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 21ந் திகதி இராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 38 பேரையும் 9 விசைப்படகுகளுடன் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கையில் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
மேலும் 28ந் திகதி தங்களின் படகுகளின் உரிமங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதுடன் ஆகஸ்ட் 2ம் தேதி படகுகளில் வெள்ளை கொடி பறக்கவிட்டு கச்சத்தீவு சென்று தஞ்சமடைவதும் என்று தீர்மானித்துள்ளனர்.
அப்படி கச்சத்தீவில் தஞ்சமடையும் போது இலங்கை கடற்படையிடம் சரணடைந்து அங்கேயே அமைதியான வாழ்க்கை வாழ்வோம் என்றும் மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.