அக்ரஹாராவிலிருந்து புழலுக்கு ஜெயலலிதாவை மாற்ற அதிமுக திட்டம்?
சென்னை: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
சிறை மாற்றம் சட்டப்படி சாத்தியமானதுதான். கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை ஐஜியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும்.
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது.
என்ன காரணத்திற்காக மாறலாம்
உடல் நலம், பாதுகாப்பு, சிறப்புக் காரணங்களின் அடிப்படையில் சிறை மாற்றத்தை சட்ட விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால் தண்டனைக் கைதிகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு அனுமதி கிடைக்கும்.
ஐஜி சம்மதித்தால்
இதற்கு கைதி தான் அடைக்கப்பட்டிருக்கும் சிறை ஐஜியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் பரிசீலித்து எந்த சிறையைக் கைதி கோருகிறாரோ, அந்த சிறையின் ஐஜியிடம் ஆலோசனை நடத்துவார். அந்த ஐஜி ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் கைதியை அவர் விரும்பும் சிறைக்கு சம்பந்தப்பட்ட சிறை ஐஜி மாற்றி உத்தரவிடுவார்.
ஜெயலலிதாவுக்கு சாதகம்
ஜெயலலிதா விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர். பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் அவருக்கு உள்ளன. மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுகிறது.
ஜெயலலிதா விருப்பம் என்ன..
அதேசமயம், இதுதொடர்பாக ஜெயலலிதா என்ன விரும்புகிறார் என்பது தெரியவில்லையாம். இதனால் ஜெயலலிதாவின் சம்மதத்தைக் கேட்ட பின்னர் இதுதொடர்பான நடவடிக்கைகளில் இறங்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனராம்.
வெளியில் வருவதில் ஜெயலலிதா உறுதி
ஆனால் சிறை மாற்றமெல்லாம் தேவையில்லை, நிச்சயம் ஜாமீனில் வெளியே வருவேன் என்ற உறுதியில் ஜெயலலிதா இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
புழலுக்கு மாறினால் புதிய வரலாறு படைப்பார்....!
ஒரு வேளை புழல் சிறைக்கு மாறினால் ஜெயலலிதா புதிய வரலாறு படைப்பார். அதாவது தனது கட்சி ஆட்சியின் கீழ், சிறையில் இருந்த முதல் தமிழக அரசியல் தலைவர் என்ற பெயரை அவர் பெறுவார்!.