மோடி நினைத்தால் ஜெயலலிதா பதவி காலி!
சென்னை: "பதவி பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் புனிதத்தை கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின்படி மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் செயல்பட வேண்டும். இதை கவனத்தில் கொண்டு குற்ற வரலாறு உடையவர்களை அமைச்சர்களாக அமர்த்த பரிசீலிக்கக் கூடாது''- இது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள ஒரு முக்கியக் கருத்து.
இந்தக் கருத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் முதல்வர் ஜெயலலிதா முதல் கொண்டு 11 தமிழக அமைச்சர்களும், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசில் இடம் பெற்றுள்ள 12 பேரும் பதவியில் நீடிக்க முடியாது.
இது தமிழக, மத்திய நிலவரம். இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்கெடுத்தால் ஏகப்பட்ட அமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடும்.
2004ல் தொடரப்பட்ட வழக்கு
குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சரவையில் நியமிக்கக் கூடாது. அமைச்சரவைகளில் குற்றப் பின்னணி உடையவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் மனோஜ் நருலா என்பவர்.
டிஸ்மிஸ்
ஆனால் அந்த வழக்கை விசாரணைக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது என்பது பிரமர், முதல்வர்களின் முடிவு, அவர்களின் உரிமை. அதில் கோர்ட் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால்...!
ஆனால் அந்த தீர்ப்பின்போது நீதிபதிகள் கூறிய இன்னொரு கருத்துதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குற்றப் பின்னணி இல்லாதவர்கள்...
''குற்றப்பின்னணி இல்லாதவர்களைக் கொண்ட அரசாங்கத்தால் ஆளப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயக குடியரசின் லட்சியம். ஜனநாயகத்தில் குற்ற வரலாறு கொண்டவர்களால் ஆளப்படுவதை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. நல்ல நிர்வாகத்தை குற்றப் பின்னணி இல்லாத, சேவை மனப்பான்மை கொண்டவர்களால் நிர்வகிக்கப்படும் அரசால் மட்டுமே வழங்க முடியும்.
பிரதமர், முதல்வர்கள் அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பெட்டகம்
பிரதமர், முதல்வர்கள் அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பெட்டகம். அவர்கள் நாட்டு நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பதவி பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் புனிதத்தை கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின்படியும் செயல்பட வேண்டும். இதை கவனத்தில் கொண்டு குற்ற வரலாறு உடையவர்களை அமைச்சர்களாக அமர்த்த பரிசீலிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர் நீதிபதிகள்.
மத்திய அரசு சட்டம் கொண்டு வருமா...
இந்தக் கருத்து நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இதனால் குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர் பதவியில் நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அப்படி வந்தால்...
அப்படி ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் மத்தியில் 12 பேரும், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 11 பேரின் பதவியும் பறி போகும் வாய்ப்பு உள்ளது.
மோடி வசம் 12 "கிரிமினல்கள்"
நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 30 சதவிகிதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்தான். மோடியையும் சேர்த்து 45 அமைச்சர்கள். இதில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த 12 பேரில் 8 அமைச்சர்கள் மீது மிக மோசமான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
நம்பர் ஒன் உமா பாரதி
இதில் நம்பர் ஒன் கிரிமினல் பின்னணி அமைச்சராக உமாபாரதி இருக்கிறார். கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவித்தல், தேர்தலில் சட்டவிரோதமான பண விநியோகம் தொடர்பான வழக்குகள் என உமாபாரதி மீது மட்டும் 13 வழக்குகள் உள்ளன.
நம்பர் 2 கட்காரி
அடுத்த இடத்தில் இருக்கிறார் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.
தமிழக நிலவரம்... கலவரம்
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், மொத்த எம்.எல்.ஏக்கள் 234 பேரில் 30 சதவிகிதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அதாவது 70 பேர்.
37 பேர் மகா மோசம்
இந்த 70 பேரில் 37 பேர் மீது மோசமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிமுகதான் நம்பர் ஒன்
அதிலும் அதிமுகவினர் மீதுதான் அதிக அளவில் வழக்குகள் உள்ளன. அதாவது 49 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜெயலலிதாவை முந்திய காமராஜ்
ஜெயலலிதா அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மொத்தம் 32 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் அமைச்சர் காமராஜ் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன.
யார் யார்...!
ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.காமராஜ், செந்தில்பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா, வளர்மதி, எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர்தான் அவர்கள்.
காமராஜ் மீது 10 கேஸ்
அமைச்சர் ஆர். காமராஜ் மீது 10 வழக்குகள் உள்ளன. 2வது இடத்தில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். 3வது இடம் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு.
பயங்கரமான வழக்ககுள்
ஆர்.காமராஜ் மீது கொலை முயற்சி, கடத்தல், கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல், ஏமாற்றுதல், மோசடி, கலவரம் ஏற்படுத்துதல் என பத்து வழக்குகளில் ஐ.பி.சி-யின் 67 பிரிவுகளில் இவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி
செந்தில்பாலாஜி மீது கொலை முயற்சி, கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல், கலவரம், மிரட்டல் என 7 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மத்திய அரசு நினைத்தால்
இந்த நிலையில் மத்திய அரசு கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தால் இத்தனை பேரின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது.