வானதியும் இல்லையாம், தமிழிசையும் இல்லையாம்.. மோகன்ராஜுலுவாமே!?
சென்னை: தமிழக பாஜக தலைவர் யார் என்ற தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதுவரை முன்னணியில் இருந்து வந்த இரு பெயர்கள் தற்போது பின்னுக்குப் போய் விட்டதாம். மாறாக சத்தமே போடாமல் மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளாராம்.
தமிழக பாஜக தலைவராக இருப்பவர் பொன் ராதாகிருஷ்ணன். அவர் தற்போது மோடி அரசில் இணை அமைச்சராகியுள்ளார். இதேபோல அகில இந்தியத் தலைவராக இருந்து வந்த ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சரானதால், அவருக்குப் பதில் அமீத் ஷாவைத் தலைவராக்கியுள்ளனர்.
அதேபோல தற்போது பொன் ராதாவுக்குப் பதில் புதிய தலைவரை நியமிக்கத் தேடி வருகின்றனர். ஆனால் தலைவரைத் தேர்வு செய்வது பெரும் இழுபறியாகவே உள்ளது. கிட்டத்தட்ட காங்கிரஸ் ரேஞ்சுக்கு ஆளாளாக்கு மேலிடத்தி்ல காக்கா பிடித்தபடி உள்ளனராம். இதனால் ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழிசை செளந்தரராஜன்
தலைவர் பதவிக்கு தற்போதைய தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின் பெயர் முதன்மையாக அடிபட்டு வருகிறது. இவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். நல்ல தமிழில் உரையாற்றக் கூடியவர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள்.
புதிய சாதனை படைப்பார்
ஒருவேளை தமிழிசை பாஜக தலைவரானால், புதிய சாதனை படைப்பார். அதாவது இந்தியாவின் இரு பெரும் தேசியக் கட்சிகளின் தமிழகத் தலைவர் பதவியை வகித்த முதல் தந்தை - மகள் என்ற பெருமை இவருக்கும், குமரியாருக்கும் கிடைக்கும்.
வானதி சீனிவாசன்
அடுத்து வானதி சீனிவாசன். தற்போது இவர்தான் பதவிக்கு கடுமையாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவரது பெயர் தற்போது பின்னுக்குப் போய் விட்டதாக சொல்கிறார்கள். இவருக்கு பொன் ராதாகிருஷ்ணனின் அமோக ஆதரவு இருக்கிறதாம்.
எச்.ராஜா
கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எச். ராஜாவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் இவருக்கு எதிரான கோஷ்டிகள் வலுவாக இருப்பதால் ராஜாவுக்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
மோகன்ராஜுலு
இவர்தான் தற்போது பட்டியலில் முன்னணியில் இருக்கிறாராம். இவரைத் தலைவராக்க பொன் ராதா தரப்பிலும் பெரிதாக அதிருப்தி இல்லை என்பதால் இவரைத் தலைவராக்கலாம் என்று பலரும் கருதுகிறார்களாம்.
ஆலோசனைக் கூட்டம்
தலைவர் பதவிக்கு யாரைப் போடலாம் என்பது குறித்த ரகசிய கருத்துக் கேட்பு கூட்டம், கடந்த 18-ம் தேதி சென்னையில் நடந்தது. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான முரளிதர்ராவ், சதீஷ் ஆகியோர் மாவட்டத் தலைவர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டனர். இதில் மோக்ராஜுலுவுக்கு ஆதரவு அதிகம் காணப்பட்டதாம்.
டெல்லிக்குப் பறந்த தமிழிசை
இந்த நிலையில் டாக்டர் தமிழிசை, எச்.ராஜா, முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லிக்குக் கிளம்பிப் போயுள்ளனர். அங்கு மேலிடத்தில் இவர்கள் லாபி செய்து பதவியைப் பெற முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.