அரசுடமையாகுமா ஜெயலலிதா போயஸ் கார்டன் வீடு?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ளது. 27ம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.
ஊழல் தடுப்புச்சட்டப்படி தண்டனை
இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம்.
கூட்டுச்சதி
முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா), மூன்றாவது (சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி செய்தல் குற்றமாகும்.
குற்றவாளிகள்
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது என்றார் நீதிபதி.
தண்டனை அபராதம்
'குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன்.
5 மடங்கு உயர்வு
வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தண்டனை
முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று வாசித்து முடித்தார் நீதிபதி குன்ஹா.
சொத்துக்கள் முடக்கம்
தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போயஸ் கார்டன், பையனூர், சிறுதாவூர் பங்களாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேதாநிலையம்
இதனிடையே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராவதற்கு முன்பாக தனது அம்மாவின் நினைவாகக் கட்டப்பட்டது.
அரசுடமையாகுமா?
ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்'' என்று கூறப்படுகிறது.