பாஜக சங்காத்தமே வேண்டாம்ப்பா... வைகோ முடிவு?
சென்னை: பாஜகவுடனான உறவை முறிக்க மதிமுக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உலா வந்து கொண்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி திருவள்ளூரில் நடைபெறும் மதிமுக மாநில மாநாட்டில் பாஜகவை ஆட்சியை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டு இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முறைப்படி அறிவிக்கவுள்ளதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஈழத் தமிழர்கள் விவகாரத்திலும், தமிழக மீனவர்கள் விவகாரத்திலும், மேலும் பல முக்கிய பிரச்சினைகளிலும் பாஜக நல்லது செய்யும் என்று பாஜகவை விட வைகோதான் உறுதிபடப் பேசி வந்தார்.
ஆனால் பாஜக வந்தது முதலே ஈழத் தமிழர் விவகாரத்தில் அது பாராமுகமாக இருப்பது மற்றவர்களை விட மதிமுகவையும், வைகோவையும்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது வைகோவும் விமர்சித்துப் பேசியபடிதான் உள்ளார்.
மேலும் பாஜக மீது வைகோ அதிருப்தி வளர்வதற்கு மேலும் பல காரணங்களும் முக்கியமாக அமைந்துள்ளதாக மதிமுகவினர் கூறுகின்றனர்.
ஏழு தமிழர் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் ஏழு தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசு, காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்று சொல்லி வருகிறார் வைகோ. இதுதொடர்பாக மத்திய அரசையும் அவர் கண்டித்துள்ளார்.
இந்தி வெறி
மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாகவும் வைகோ கண்டித்துப் பேசியுள்ளார். இந்தி திணிப்பில் பா.ஜ., அரசு ஈடுபட்டால், அது இந்திய ஒருமைப்பாட்டுக்கே கேடாக முடியும் என்றும் கண்டித்துள்ளார் வைகோ.
சமஸ்கிருதத் திணிப்பு
அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டதையும் வைகோ விரும்பவில்லை, அதையும் கண்டித்துள்ளார்.
சுஷ்மாவின் செயலுக்குக் கண்டனம்
இந்தியா வந்த, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசை, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்ததற்கும், கண்டனம் தெரிவித்துள்ளார் வைகோ.
விளங்காத ரயில்வே பட்ஜெட்
அதேபோல மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே வைகோ சாடியுள்ளார்.
கடும் அதிருப்தி
தமிழக மீனவர்கள் விவகாரத்திலும், தமிழகம் தொடர்பான பிரச்சினைகளிலும் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகவும் வைகோ கருதுகிறார். இதனால் மோடி அரசு மீது அவர் அதிருப்தியுடன் இருக்கிறார்.
திருவள்ளூர் மாநாட்டில் அர்ச்சனைக்கு வாய்ப்பு
எனவே இவற்றையெல்லாம் திருவள்ளூர் மாநாட்டில் வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசலாம், தீர்மானங்கள் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நம்பிக்கையில் பாஜக
ஆனால் பாஜக கூட்டணிக்கு முதல் ஆளாக வந்தவர் வைகோ. அவர் முதல் ஆளாக கூட்டணியை விலகுவார் என்று தாங்கள் கருதவில்லை. அவர் போக மாட்டார் என்றே நம்புகிறோம் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.