ஆம்னி பஸ்ஸின் அராஜகம் .. நடுரோட்டில் நள்ளிரவில் பரிதவித்த இளம் பெண்
தூத்துக்குடி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் தவிக்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சந்தோஷ்ராஜ். இவரது மகள் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்காக தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவன சொகுசு ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார். 28ம் எண் படுக்கையுடன் கூடிய இருக்கை ஒதுக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு பஸ் புறப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் மாலை 4.30 மணிக்கு சம்பந்தப்பட்ட தனியார் பஸ் கம்பெனிக்கு போன் செய்து பஸ் புறப்படும் நேரம் பற்றி கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர் பஸ் எழும்புரிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்படும் என்று கூறியுள்ளார். அந்த பெண் தன்னால் கோயம்பேடு வருவது சிரமம் என்று கூறியுள்ளார். பஸ் நிறுவன ஊழியர் பெருங்களத்தூர் காமராஜர் சிலை சந்திப்புக்கு பஸ் இரவு 10.30 மணிக்கு வரும். நீங்கள் அங்கு ஏறி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி அந்த இளம்பெண் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு 9.45 மணி முதல் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வரவே இல்லை. பேருந்து வராதது குறித்து அப்பெண் கோயம்பேடு பேருந்து அலுலகத்துக்கு போன் செய்து கேட்டபோது உங்கள் தேவையெனில் நீங்கள் பேருந்தை கண்டுபிடித்து ஏற வேண்டும் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதற்கு அந்த பெண் எனக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி தாருங்கள் என அவர் கேட்டுள்ளார். அதற்கு ஆன்லைனில் போய் பணத்தை எடுத்துகொள் என்று மரியாதை இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் நள்ளிரவு 1.30க்கு திருச்சி, மதுரை என பல பஸ்கள் மாறி ஊர் வந்து சேர்ந்துள்ளார். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள பேருந்து அலுவலகத்தில் கேட்டதற்கு அங்கிருந்த ஊழியர் தகுந்த பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், சரியான பதில் அளிக்காமல் எனது மகளை நள்ளிரவில் தவிக்க விட்ட தனியார் பேருந்து நிர்வாகத்தினை சட்ட ரீதியாக அணுகுவேன் என்று கூறினார்.