கோவையில் கருத்தரிப்பு ஊசி விபரீதம்- வலிப்பு வந்து இளம்பெண் பரிதாப பலி!
கோவை: கோவை மருத்துவமனையில் கருதரிப்பதற்காக சிகிச்சை பெற்ற வட இந்ந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சுஜாதாசாவுத். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
தனியார் மருத்துவமனை சிகிச்சை:
இதனால் கணவனும், மனைவியும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக சுஜாதா சாவுத் நேற்று மருத்துவமனைக்குச் சென்றார்.
கருத்தரிக்க ஊசி:
அங்கு அவருக்கு கருத்தரிப்பதற்கான ஊசி போடப்பட்டது. அதன் பின்னர் வீடு திரும்பினார்.
திடீர் வலிப்பு:
நள்ளிரவில் திடீரென்று சுஜாதா சாவுத்துக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிதாப உயிரிழப்பு:
அங்கு இரவு மருத்துவர்கள் இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுஜாதா சாவுத் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை:
இதுகுறித்து சுஜாதாவுக்கு மருத்துவம் செய்த தனியார் மருத்துவமனையின் மேல் வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.