இறாலுக்கு மருந்தாகும் மண்புழுக்கள் – விழுப்புரத்தில் கடும் கிராக்கி
விழுப்புரம்: விழுப்புரத்தில் இறாலுக்கு மருந்தாகும் மண்புழுக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் 1000 க்கும் மேற்பட்ட இறால் பண்ணை குட்டைகள் உள்ளன.
இங்கு இறால் மீன் குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். 90 நாட்கள் வரை இவைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.
மண்புழு வைத்தியம்:
சமீப காலமாக இந்த மீன் குஞ்சுகளை நோய் அதிகம் தாக்கியது. அதை பாதுகாக்க என்ன செய்யலாம் என்று இறால் பண்ணை உரிமையாளர்கள் பலரிடம் கேட்டனர். அதற்கு மண்புழு கொடுத்தால் அவைகளை நோய் தாக்காது என்று சிலர் கூறினார்கள்.
நோய் தாக்கா அதிசயம்:
இதையடுத்து இறால் பண்ணை உரிமையாளர்கள் இறால் குஞ்சுகளுக்கு மண்புழு வாங்கி போட்டார்கள். பின்னர் அவைகளை நோய் தாக்கவில்லை.
மண்புழுவிற்கு பணம்:
இதையடுத்து அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விலைகொடுத்து மண்புழுவை வாங்கி வந்து இறால் மீன் குஞ்சுகளுக்கு போட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களும் மண்புழுக்களை பிடித்து அவர்களிடம் கொடுத்து பணம் பெற்று செல்கின்றனர்.
கடும் கிராக்கி:
இறால் பண்ணை உரிமையாளர்கள் பொதுமக்களிடம் அதிக அளவிற்கு மண்புழுக்கள் கேட்கின்றனர். எனவே இறால் மீன் குஞ்சுகளின் நோய் தீர்க்கும் மருந்தான மண் புழுவிற்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தொழிலாக மாறியது:
1 கிலோ மண் புழுக்கள் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை கூடியுள்ளதால் பலர் மண்புழு பிடிப்பதை தங்களது தொழிலாக செய்து வருகின்றனர். ஆனால், மண்ணிற்கு வலு அளிக்கும் மண் புழுக்களைக் கொன்றால், மண் வளம் பாதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.