7வது முறையாக ஏற்காட்டை வென்ற அதிமுக!
சேலம்: ஏற்காடு தனித் தொகுதி கிட்டத்தட்ட அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இங்கு அதிமுகதான் அதிமுக முறை வெற்றி பெற்றுள்ளது.
மலை வாழ் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிதான் ஏற்காடு. மலைப்பகுதி கிராமங்கள்தான் இங்கு அதிகம்.
இங்கு ஆரம்பத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்தது. சில முறை திமுகவும் வென்றுள்ளது. இருப்பினும் அதிமுகதான் அதிக முறை வென்றுள்ளது.
1957ல் காங்கிரஸ்
1957ம் ஆண்டு முதல் இங்கு தேர்தல் நடந்து வருகிறது. முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது இரட்டை உறுப்பினர் தொகுதியாக இது இருந்ததால் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் இந்தத் தொகுதியின் முதல் உறுப்பினர்கள் ஆண்டி கவுண்டன் மற்றும் லட்சுமணக் கவுண்டன்.
62ல் மீண்டும் காங்கிரஸ்
1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கொழந்தசாமி வெற்றி பெற்றார்.
திமுக வசம் போன ஏற்காடு
1967 தேர்தலில் திமுக முதல் முறையாக இங்கு வென்றது. அக்கட்சியின் வி.பொன்னுச்சாமி வெற்றி பெற்றார்.
மீண்டும் திமுக
1971ல் நடந்த பொதுத் தேர்தலிலும் திமுகவே மீண்டும் வென்றது. அக்கட்சியின் சின்னுச்சாமி வெற்றி பெற்றார்.
முதல் முறையாக அதிமுக
1977 பொதுத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது. அக்கட்சியின் ஆர். காளியப்பன் வெற்றி பெற்றார்.
80 தேர்தலிலும் அதிமுகவே
1980ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதிமுகவே வென்றது. அக்கட்சியின் திருமன் வெற்றி பெற்றார்.
84ல் வென்ற காங்கிரஸ்
1984 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது.
ஜெ. அணியின் சேவல் சின்னத்தில் வென்ற பெருமாள்
தற்போது மறைந்து விட்ட சி.பெருமாள் அதிமுக ஜெ அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்றார்.
மீண்டும் பெருமாள்
அதே பெருமாள் 1991ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். இந்த முறை அவர் அபார வெற்றி பெற்றார். அதாவது பதிவான வாக்குகளில் 72 சதவீதத்தை அவர் பெற்றார்.
96ல் புகுந்த திமுக
ஆனால் 1996ல் நடந்த தேர்தலில் இங்கு அதிமுக தோற்றது. மாறாக திமுக வேட்பாளர் வி.பெருமாள் வென்று விட்டார்.
2001-ல் மீ்ண்டும் அதிமுக
2001ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று தொகுதியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் இளையகண்ணு வெற்றி பெற்றார்.
மறுபடியும் திமுக
இருப்பினும் 2006 தேர்தலில் மீண்டும் திமுக வென்றது. அக்கட்சியின் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
2011ல் அதிமுக அபார வெற்றி
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. சி.பெருமாள் திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை வீழ்த்தினார்.
7வது முறையாக வெற்றி
தற்போது பெருமாளின் மறைவைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் அவரது மனைவி சரோஜா போட்டியிட்டு வென்றுள்ளார்.