காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தீக்குளித்து தற்கொலை- போலீஸ் விசாரணை!
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே இ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பெரியஆண்டவன். இவர் வேன்டிரைவர். அதேபகுதியை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை அவர் காதலித்து வந்தார்.
ஊரை விட்டு ஓட்டம்:
பிரியாவும் அவரை விரும்பினார். ஒரு வருடமாக காதலித்து வந்த அவர்கள் கடந்த ஜூன் மாதம் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
உறவினர்கள் சமாதானம்:
அதன்பின்னர் உறவினர்கள் அவர்களை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர்.
பெற்றோர் வீடு:
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பிரியா கணவருடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இரவில் இருவரும் அங்கேயே தங்கினர். நள்ளிரவு நேரத்தில் பிரியா திடீரென எழுந்து தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
தீவைத்துக் கொண்ட பிரியா:
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டவர்கள் விழித்தனர். பிரியாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
சிகிச்சை பலனின்றி இறப்பு:
90 சதவீதம் தீக்காயமடைந்த பிரியாவை ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.
பிரியாவின் தற்கொலை:
பிரியாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சிறு சிறு விஷயங்களுக்கு கூட அவர் கோபப்படும் குணமுடையவராம். இதனால் கணவருடன் ஏற்பட்ட மனகசப்பில் அவர் தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று இடையகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை:
திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது.