சோழர் மன்னரின் வாரிசு சிதம்பரநாத சூரப்ப சோழர் காலமானார்
சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள் சிதம்பரத்தையடுத்த பிச்சாவரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆன்மிக வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் சூரப்ப சோழனாரின் முன்னோர்கள் ஏராளமான உதவிகளை செய்திருக்கின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது சூரப்ப சோழனார் குடும்பத்தினர் தான். சிதம்பரம் நடராஜர் கோயில் சிறிது காலத்திற்கு முன்புவரை இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு சாந்தி தேவி என்ற மனைவியும், சக்ரவர்த்தி, மன்னர் மன்னன் என்ற இரண்டு மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உண்டு. சிதம்பர நாதர் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். யாரிமும் வேலை கேட்டு செல்லவில்லை. தங்களிடம் இருந்த சொற்ப நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவினால் ஞாயிறன்று மரணமடைந்தார்.
சோழர் பரம்பரையில் வந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு கடந்த 1978 ஆம் ஆண்டு சோழர்களின் குலக் கோவிலான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்களால் முடிசூட்டப்பட்டது.
சோழ மன்னர்களுக்கு மட்டும் தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் முடி சூட்டப்படும் என்பதும், சோழர்களை வெற்றி கண்ட களப்பிரர் மன்னர் கூற்றுவநாயனார் தமக்கு முடி சூட்டும்படி கோரிய போது அதை ஏற்க சிதம்பரம் தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர் என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் சிதம்பரநாத சூரப்ப சோழனார் சோழர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும்.
டாக்டர் ராமதாஸ் இரங்கல்
அவரது மறைவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சோழ மன்னர்களின் வாரிசும், வன்னிய குலத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் உடல்நலக் குறைவால் சிதம்பரத்தில் நேற்றிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், தாங்கமுடியாத துயரமும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், வன்னிய குல மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகில் உள்ள செல்லப்பன்பேட்டையில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.