ட்வீட் ஆய்வு: திடமாக இருக்கும் பாஜக, 'வீக்'காக இருக்கும் காங்கிரஸ்
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பாஜகவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்று முதல் வரும் மே மாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் இன்று துவங்கியது.
தேர்தலையொட்டி மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் தேர்தல் பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை Ohio Center of Excellence in Knowledge-enabled Computing (Kno.e.sis) அமைப்பு ஆய்வு செய்து எந்த கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
ட்விட்டர்
ட்விட்டரில் கடந்த மாதம் மட்டும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை பற்றி 15 மாநிலங்களில் 9 லட்சம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக
ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், ஹரியானா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக பற்றி நல்லவிதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்று உத்தர பிரதசேத்தில் பாஜகவுக்கு எதிராக மிக குறைவான அளவே ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி
ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பலர் ட்வீட் செய்துள்ளனர். மேலும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து குறைவான ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இமாச்சல பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் தான் ஏராளமானோர் ட்வீட் செய்துள்ளனர். ஆந்திரா, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குறைவான பேரே காங்கிரஸுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளனர்.