நீங்கள் முதல்வர், வரக் கூடாது... ஓ.பன்னீர் செல்வத்தை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா
பெங்களூர்: ஓ.பன்னீர் செல்வம் தற்போது முதல்வர். அவர் சிறைக்கெல்லாம் வரக் கூடாது. நிர்வாகத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். எனவே அவரைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று கூறி விட்டார் அதிமுக பொதுச் செயலாளர். இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் வந்த மூத்த அமைச்சர்களும் ஏமாற்றமடைந்தனர்.
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர் செல்வமும், புதிய அமைச்சர்களான கோகுல இந்திரா, செந்தில் பாலாஜி, பா. வளர்மதி, கே.சி.வீரமணி, ப.மோகன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பெங்களூருக்கு வந்தனர். ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக முயன்றனர்.
ஆனால் அவர்களுக்கு முதலில் சிறை நிர்வாகத்திடமிருந்தும், பின்னர் ஜெயலலிதாவிடமிருந்தும் அனுமதி கிடைக்கவில்லை.
இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக முதல்வர் வந்துள்ள விஷயம் குறித்து ஜெயலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அவர், ஓ.பன்னீர் செல்வம் தற்போது முதல்வர். அவர் சிறைக்கெல்லாம் வரக் கூடாது. நிர்வாகத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். எனவே அவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற செய்தியை சிறை நிர்வாகம் மூலம் ஓ.பன்னீர் செல்வத்திற்குத் தெரிவித்தார். இந்த செய்தி தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.
ஜெயலலிதா பார்க்க மறுத்து திரும்பிச் செல்லுமாறு கூறியதால் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்தனர்.