பிரதமர் மோடி போட்ட போடு... "சம்பூர் அனல் மின் நிலைய" பணிகளை உடனே முடுக்கிவிட்ட ராஜபக்சே!
டெல்லி: இலங்கை திரும்பிய உடனே இந்தியாவின் "சம்பூர் அனல் மின் நிலைய" திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதன் மூலம் மிகப் பெரிய நெருக்கடியை அவர் டெல்லியில் எதிர்கொண்டது வெளிப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற உடன் அத்தனை புன்முகத்துடன் டெல்லி வந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அதன் பின்னர் பிரதமர் மோடியுடன் தனியே பேச்சுவார்த்தையும் நடத்தினார் ராஜபக்சே.
ஆனால் முந்தைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எதிர்பார்த்த இணக்கத்தை மோடியிடம் அவரால் பெறமுடியவில்லை என்று கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியைவிட்டு இலங்கையில் கால் பதித்த உடனே இந்தியாவுடனான 'சம்பூர்" அனல் மின் நிலைய திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார்.
|
சம்பூர் திட்டம் என்பது என்ன?
இலங்கையின் கிழக்குப் பகுதியில் திருகோணமலை அருகே இருப்பது சம்பூர் கிராமம். இது முழுவதும் தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த பிரதேசம். 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்த நிறுத்தம் அமலில் இருந்த போது இங்கே அனல்மின் நிலையம் அமைக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்குக் காரணம் சிங்களவர் பகுதியில் நுரைச்சோலை என்ற இடத்தில் அனல்மின் நிலையம் அமைப்பதில் சீனா மும்முரம் காட்டியதுதான்.
ஆனால் சீனாவின் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து வந்த இலங்கை, இந்தியா முன்னெடுத்த இத்திட்டத்துக்கு இழுபறியைத்தான் காட்டியது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தொடங்கிய போது சம்பூர் பிரதேசத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர நேரிட்டது. அதோடு சரி.. அந்த பாரம்பரிய தமிழர் கிராமம். இலங்கை ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
தமிழர்கள் தங்களது வாழ்விடமான சம்பூருக்கு திரும்ப முடியாமல் இன்னமும் அகதிகளாக வயல்வெளிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது பெருங்கொடுமை. இப்படி தமிழர்களை அகதிகளாக்கிவிட்டு வளைத்து போடப்பட்ட சம்பூரில் திட்டமிட்டபடி ஆண்டுகள் உருண்டோடியும் மின் திட்டம் தொடங்கப்படவில்லை.
|
2011-ல் மீண்டும் முயற்சி
இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து சம்பூர் அனல்மின் நிலைய திட்டத்துக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்துப் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தையும் கூட இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. வழக்கமான இழுத்தடிப்பே நடந்தது.
|
2013ல் மீண்டும் ஒப்பந்தம்
பின்னர் 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜபக்சே இருவரும் மீண்டும் கையெழுத்துப் போட்டனர். 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய அனல்மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும் இழுபறிதான்..
|
சம்பூர் ஏன்?
சம்பூர் பிரதேசத்தை இந்தியா தேர்ந்தெடுத்ததன் காரணமே திருகோணமலை துறைமுகம்தான். சம்பூர் அனல்மின் நிலைய பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் ஆண்டாண்டு கால கனவான திருகோணமலை துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் நிலைகொள்வது என்பதைத்தவிர வேறு ஏதுமில்லை.
மோடி காட்டிய காட்டம்
இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தேறியது. முன்னைய பிரதமர்களைப் போல இல்லாமல், (மோடி அரசு முன்னெடுப்பது சாத்தியமா? பயனுள்ளதா? என்பதற்கு அப்பால்) இலங்கை அதிபரிடம் காட்டமாக பேசியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இலங்கையில் கால் வைத்த உடனேயே சம்பூர் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டிருப்பது ராஜபக்சேவுக்கு டெல்லியில் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன என்கின்றனர் கொழும்பு ஊடகவியாளர்கள்.