ஹெலிகாப்டர் ஊழல் வழக்கால் நெருக்கடி.. மே. வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ராஜினாமா!!
கொல்கத்தா: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்திய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் பதவியை எம்.கே. நாராயணன் ராஜினாமா செய்துள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச ஆளுநர் ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வனிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கர்நாடகா ஆளுநராக இருந்த பரத்வாஜ்-ன் பதவிக் காலம் முடிவடைந்தது.
ஆனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும் மேற்கு வங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் தாம் பதவி விலக கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக எம்.கே. நாராயணனிடம் கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணையை ந்டத்தியது. இதைத் தொடர்ந்து இன்று அவர் தமது மேற்கு வங்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.பி.யின் தலைவராகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் எம்.கே.நாராயணன் பணியாற்றினார். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த 2009ஆம் ஆண்டில் தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.