வங்கியின் ஏமாற்று வேலை-நீதிமன்றம் அபராதம்
கோவை: வீட்டுக் கடன் பெற்ற விவகாரத்தில் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கும்படி, வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி செந்தில்வடிவு. வீடு கட்டுவதற்காக சண்முகம், கோவையில் உள்ள ஒரு பிரபல வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்றார்.
கடன் பெறுவதற்காக, வங்கியின் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு ரூ.36,877 இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை கட்டியுள்ளார். இந்த நிலையில் சண்முகம் சாலை விபத்தில் திடீரென இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் சண்முகத்தின் மனைவி செந்தில்வடிவுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது.
அதில், சண்முகம் உயிருடன் இருக்கும்போது அவர், மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை பெறப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பணம் தர மறுக்கின்றனர். எனவே நிலுவையில் உள்ள வீட்டு கடன் தொகையை நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தில் வடிவு கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ பரிசோதனை குறித்து வங்கிதான் அறிவுறுத்தியிருக்க வேண்டும். எனவே வீட்டுக்கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து, சண்முகம் இறந்து பின்பு கட்டிய கடனுக்கான தொகையையும் திரும்ப வழங்க வேண்டும்.
மேலும் மனுதாரர் மன உளைச்சல் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,000, செலவு தொகையாக ரூ.1000 ஆகியவற்றை, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.