நள்ளிரவு வரை நீடித்த ஐபிஎல் அலுவலக ரெய்ட்-லலித் மோடியிடமும் விசாரணை
மும்பை மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகத்தில் நேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பில் பெரும் பணம் புழங்குகிறது. இதன் நிர்வாகத்திலும், வருவாயிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு வர வேண்டிய ரூ. 300 கோடி வரி வருவாயைக் குறைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் நிர்வாகத்தைக் கண்காணித்து வந்த வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி ரெய்டில் இறங்கினர். நேற்று மாலை 6 மணியளவில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்திற்குள் உள்ள ஐபிஎல் தலைமையகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
அங்கு தீவிர சோதனைகள் மற்றும் விசாரணையில் அவர்கள் இறங்கினர். கிட்டத்தட்ட 7 மணி நேரம் இந்த சோதனை மற்றும் விசாரணை நடந்த்து. நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1.30 மணியளவில்தான் வருமானவரித்துறைக் குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.
சோதனையின்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி உடன் இருந்தார்.
சோதனையின் முடிவு என்ன, ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வெளியிட வருமான வரித்துறையினரும், ஷெட்டியும் மறுத்து விட்டனர்.
சோதனையின்போது ஐபிஎல் ஆணையர் லலித் மோடி அங்கு விரைந்து வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இங்கு சோதனையை முடித்து விட்டு ஒர்லி பகுதியில் உள்ள மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போதும் மோடி உடன் இருநதார்.
மோடியின் உறவினர்கள் 3 பேர் ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்களில் தொடர்பு வைத்துள்ளனர். இதுதவிர பல்வேறு அணிகளை வாங்கிய விவகாரத்தில மோடியின் ஆதிக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. உச்சகட்டமாக ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய விவகாரத்தில் மோடி தரப்பிலிருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்ப்ட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
கொச்சிக்குப் பதில் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அணியை உருவாக்க மோடி கடுமையாக முயன்றார். அது முடியாததால்தான் தற்போது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார் என கொச்சி அணியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரி சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.