இன்டர்நெட் சுதந்திரத்தை இந்தியா மதிக்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை
தென்னிந்திய நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற காரணமாக இருந்த வதந்திகள் இணையதளம், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஆகியவை மூலம் தான் காட்டுத்தீ போன்று பரவியது. இதையடுத்து மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள வதந்தி செய்திகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர வன்முறை மற்றும் வெறுப்பை உண்டாக்கும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி 250 இணையதளங்களை அரசு முடக்கியது.
இதற்கிடையே வதந்தியைப் பரப்பிய இணையதளங்கள் குறித்த விவரத்தை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் கூறுகையில்,
தென்னிந்திய நகரங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியது குறித்த அறிக்கையை அமெரிக்கா பார்த்தது. நாங்கள் இன்டர்நெட்டுக்கு முழு சுதந்திரம் அளித்து வருகிறோம். ஆனால் இணையதளங்களை முடக்கியுள்ள இந்தியா தனக்கு என்று பிரத்யேக மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தை வைத்துக்கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றார்.