உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து- மத்திய அரசு ஒப்புதல்!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா உள்ளார். அவரது பதவி காலம் வரும் 27ந் தேதியுடன் முடிவடைகிறது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமிக்கப்படுகிறார். மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்து விட்டது. தத்து நியமனம் தொடர்பான கோப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 42வது புதிய தலைமை நீதிபதியாக தத்து பொறுப்பு ஏற்க இருக்கிறார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் வரை அவர் தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார்.
64 வயதான அவரது முழுப்பெயர் ஹண்ட்யாலா லட்சுமி நாராயணசாமி தத்து. அவர் 1975ஆம் ஆண்டு பெங்களூரில் வழக்கறிஞர் பயிற்சியை தொடங்கினார்.
1995ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2007ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
2008ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.