94 இளம் சிறார்களைக் கருக்கி சாம்பலாக்கிய கும்பகோணம் தீவிபத்து.. நிரந்தரமாகிப் போன வேதனை நினைவுகள்!
சென்னை: 94 குழந்தைகள்.. சின்னச் சின்னக் குழந்தைகள்.. வெந்து போய், கருகிப் போய், கட்டையாகிக் கிடந்த அந்தக் கோலம். பார்த்தவர் மனதைப் பதற வைத்தது... இன்னும் கூட அந்தக் காட்சிகள் மறக்க முடியாமல் மனதை நோகடித்து வருகிறது.. அவர்களில் எத்தனை ராமானுஜன்கள் இருந்திருப்பார்கள், எத்தனை அப்துல் கலாம்கள் இருந்திருப்பார்கள்... எத்தனை இந்திரா காந்திகள் இருந்திருக்கலாம்.. எத்தனை அன்னை தெரசாக்கள் இருந்திருக்கலாம்.. எல்லாம் சில மணி நேரங்களில் முடிந்து அடங்கிப் போனது.
கோரமான கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 94 இளம் சிறார்கள் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் 10 ஆண்டு தாமதத்திற்குப் பின்னர் நேற்று தஞ்சை நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. தீர்ப்பில் பிள்ளையப் பறி கொடுத்த பெற்றோர்களுக்குத் திருப்தி இல்லை. இன்னும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்று அவர்கள் குமுறலுடன் கூறுகிறார்கள்.
94 பிஞ்சு உயிர்களைப் பழி வாங்கிய இந்த கோர சம்பவம் நடந்தது முதல் நேற்று வரையிலான நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்போம்.
குறுகிய இடம்.. 3 பள்ளிகள்
கும்பகோணத்தின் மிகக் குறுகிய காசிராமன் தெரு. அந்தத் தெருவில் அதை விட குறுகலான, அடைசலான கட்டடம். அதில் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளி, சரஸ்வதி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என மூன்று பள்ளிகள்.
சின்ன கேட்
அந்தப் பள்ளியின் கேட் அதை விட சிறியது. அதாவது 4 அடிதான் அந்த கேட். கேட்டைத் திறந்து உள்ளே போனதுமே வகுப்புகளைப் பார்க்கலாம். அவ்வளவு சிறிய கட்டடம்.
அடிப்படை வசதிகள் மோசம்
அத்தனை சிறிய கட்டடத்தில், மொத்தமாக 780 பேர் வரை படித்து வந்தனர். அடிப்படை வசதிகள் மிகவும் மோசம். இட நெருக்கடியில் சிக்கித் தவித்தபடி பிள்ளைகள் ஆடு மாடுகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கூரையில் அமைந்த சத்துணவுக் கூடம்
இதை விட அதி பயங்கரமான அபாயகரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு குறுகலான இடத்தில் உள்ள அந்தப் பள்ளியில், சத்துணவுக் கூடம் கூரைக் கட்டடத்தில் அமைந்திருந்ததுதான்.
ஜூலை 16, 2004
2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கோர தாண்டவத்தை சந்தித்தது அந்தப் பள்ளி. பள்ளியின் சத்துணவுக் கூடத்திலிருந்து கிளம்பிய தீப்பொறி, பள்ளியின் கூரை மீது திடீரென காலை 10.30 மணிக்கு பற்றி தீப்பிடித்துக் கொண்டது. அந்த கூரையானது சாதாரண ஓலையால் வேயப்பட்டதாகும். தீ பரவியதைப் பார்த்த பிள்ளைகள் அலறினர்.
மாடியில் சிக்கிக் கருகிய மொட்டுக்கள்
கீ்ழ்த் தளத்தில் இருந்த குழந்தைகளை வேகமாக வெளியேற்றி விட்டனர். ஆனால் மாடியில் சிக்கியவர்கள்தான் சிதைந்து போனார்கள் பரிதாபமாக. காரணம் குறுகலான மாடிப்படி, குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் பலர் தாங்கள் தப்பிக்க ஓடி விட்டதால், பரிதாபமாக மாட்டிக் கொண்டன அந்தக் குழந்தைகள்.
சந்துக்குள் நுழைய முடியாமல் திணறிய தீயணைப்பு வாகனம்
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்தது தீயணைப்பு வாகனம். ஆனால் அந்த சந்துக்குள் நுழைய முடியாமல் திணறினர். மேலும் குறுகலான தெரு என்பதால் அதிக வாகனங்களையும் கொண்டு வர முடியாத நிலை.
சம்பவ இடத்தில் 76 குழந்தைகள் பலி
தீவிபத்து ஏற்பட்ட தளத்தில் 76 குழந்தைகள் உடல் கருகி, அடையாளம் தெரியாத அளவுக்கு இறந்து போயிருந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்தன. மொத்தமாக 94 குழந்தைகள் உயிரிழந்து போனார்கள்.
பல ஊர் மருத்துவமனைகளில் சிகிச்சை
விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க, சென்னை, வேலூர், மதுரை என பல ஊர்களிலிருந்தும் டாக்டர்கள் விரைந்தனர். அதேபோல மீட்கப்பட்ட குழந்தைகள் பல, சென்னை கீ்ழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, கோவை என அனுப்பப்பட்டன.
ஜூலை 20ல் சம்பத் கமிஷன் அமைப்பு
இந்த பயங்கர தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த 2004 ஜூலை 20ம் தேதி நீதிபதி கே.சம்பத் தலைமையிலான விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
ஆகஸ்ட் 1ல் தொடங்கிய விசாரணை
நீதிபதி சம்பத் கமிஷன் தனது விசாரணையை 2004, ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.
2005 ஜூன் 30ல் முடிந்த விசாரணை
நான்கு மாதங்களில் முடிய வேண்டிய கமிஷன் விசாரணை 4 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 2005ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி விசாரணை முடிவடைந்தது.
அதிகாரிகள் மீது தவறு
சம்பத் கமிஷன் அறிக்கையில் அதிகாரிகள் பக்கம் அதிக தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மேலும் பள்ளியில் போடப்பட்டிருந்த ஓலைக் குடிசைதான் தீவிபத்துக்கும், பெரும் உயிர்ப் பலிக்கும் முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கும்பகோணம் பள்ளி தீவிபத்தைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதில் இதுபோல கூரையால் அமைந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயிரபாயத்தைத் தடுக்கத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
கைதுகள்
விபத்தைத் தொடர்ந்து பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கூரைகள் உள்ள பள்ளிக்கூடங்களில் உடனடியாக அதை அகற்றி விட்டு ஆர்சிசி கூரை போடுமாறு உத்தரவிடப்பட்டது. குடிசைகளில் பள்ளிகளையும், வகுப்புகளையும் நடத்த தடை விதிக்கப்பட்டது.
2004 ஜூலை 17ல் நிவாரண நிதி
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
கும்பகோணத்தில் நினைவுச் சின்னம்
மரித்த 94 குழந்தைகளின் நினைவாக கும்பகோணத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அங்கு 94 மரக் கன்றுகள் நடப்பட்டன. காவிரிக் கரையோரமாக, பாலக்கரையில் மாநில அரசு நினைவுப் பூங்கா ஒன்றையும் அமைத்தது. 2010ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நினைவுப் பூங்காவைத் திறந்து வைத்தார்.
59 பெற்றோருக்கு இலவச வீட்டு மனை
தீவிபத்தில் உயிரிழந்த 59 குழந்தைகளின் பெற்றோர்கள் நிரந்தர வீடு இல்லாமல் இருந்ததால் அவர்களுக்கு அரசு இலவச வீட்டு மனைகளைக் கொடுத்தது. இந்த இடங்களில் மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டன.
2012ல் தொடங்கிய வழக்கு
சம்பவம் நடந்து 2 ஆண்டு தாமதத்திற்குப் பின்னர் 2012ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதிதான் தீவிபத்து வழக்கின் விசாரணையே தொடங்கியது. மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 488 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
3 அப்ரூவர்கள்
தலைமை ஆசிரியர் பிரபகாரன் உள்ளிட்ட 3 பேர் அப்ரூவர்களாக மாறினர். 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜூலை 30ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வழக்கு முடிந்து விட்டது.. தண்டனையும் கொடுத்தாகி விட்டது.. இனி அடுத்தடுத்து அப்பீல்கள் தொடங்கும்.. ஆனால் 94 குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு மட்டும் வேதனை நிரந்தரமாகி விட்டது.