பூத் சிலிப் கிடைக்காமல் அலைந்த காங்கிரஸ் வேட்பாளர்- வாங்கி கொடுக்க ஆளில்லாத பரிதாபம்
சேலம்: தருமபுரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராம.சுகந்தன் (மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்) வாக்களிக்க வந்த இடத்தில் வழிகாட்ட கூட ஆளில்லாமல் சுற்றித்திருந்து கடைசியில், பத்திரிகையாளர்கள் உதவியுடன் வாக்களித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் தமிழகத்தில் முன்வரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவரே தனித்துவிடப்பட்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம.சுகந்தன். இவரது வீடு சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ளது.
நேற்று காலையிலேயே ரெட்டியூர் உயர் நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்துக்கு வாக்களிப்பதற்காக அவர் சென்றார், ஆனால் அவருடன் தொண்டர் என்று சொல்லிக்கொள்ளக்கூட ஒருவரும் செல்லவில்லை.
வாக்குச்சாவடியிலுள்ள 115 மற்றும் 116 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு ராம.சுகந்தன் சென்றார். அந்த சாவடிகளில் உள்ள பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. மேலும், அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருந்தது. வாக்களிப்பதற்குத் தேவையான வாக்காளர் பூத் சிலிப் அவரிடம் இல்லை. இதையடுத்து, வாக்குப்பதிவு மையத்தைவிட்டு அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதுதொடர்பாக யாரிடம் விசாரிப்பது என்பது தெரியாமல் அங்கேயே திரும்பி திரும்பி பார்த்து விழித்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு உதவி செய்யக்கூட யாரும் முன்வரவில்லை, அவரை கண்டுகொள்ளவும் இல்லை. அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் சிலர்தான் காங்கிரஸ் வேட்பாளரின் நிலையைப்பார்த்து பரிதாபப்பட்டு, சற்று தூரத்தில் இருந்த வாக்காளர் பூத் சிலிப் வழங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அடையாள அட்டையை காண்பித்து பூத் சிலிப் பெற்றுக்கொடுத்தனர். அதன்பிறகுதான் ராம.சுகந்தன் வாக்களித்தார்.