குளிச்சா குற்றாலம்... குளு குளு சீசனை அனுப்பவிக்க வாங்களேன்!
குற்றாலம்: தென்மேற்குப் பருவக்காற்றுக்காற்று வீசத்தொடங்கிவிட்டாலே போதும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடங்கிவிடும்.
இந்த மழைநீர் ஆறாக ஓடி மூலிகைக்காடுகளில் முட்டி மோதி குற்றாலத்தில் வந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி நீரில் .குளிப்பதே தனி ஆனந்தம்தான். எத்தனை எத்தனை முறை குளித்தாலும் அந்த குளுமை உடலில் பட்டு இதயத்தில் ஊடுரும். இந்த அருவி நீரில் குளித்தால் சருமநோய்களும், மனநோய்களும் கூட குணமாகும்.
குற்றால நகரமெங்கும் பன்னீர் தெளிப்பது போல சாரல் தூவ, குளுமையான காற்றும் வீச அந்த பருவநிலையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் கூட்டம் கூடும்.
இதோ இந்த ஆண்டு குற்றால சீசன் களை கட்டியிருக்கிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு குற்றால நகரம் கொஞ்சம் பளிச்சென்றுதான் இருக்கிறது காரணம் உயர்நீதிமன்றம். அருவிக்கரையில் துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பளிங்குபோல சலசலத்து ஓடுகிறது தண்ணீர். குற்றாலத்தில் நாளை சாரல் விழா தொடங்க உள்ளது, மலர்க்கண்காட்சியும் பயணிகளைக் கவரும் தொடங்க உள்ளது. குற்றால அருவிகளின் சிறப்புக்களையும், அங்குள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களையும் தினந்தோறும் தெரிந்து கொள்ளுங்களேன்.
தென்னகத்தின் ஸ்பா
ஒரு அருவி இருந்தாலே குளிக்கும் ஆசை அதிகரிக்கும் ஆனால் குற்றாலத்திலோ 9 அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளித்து கரையேறினால் உடம்பெல்லாம் மசாஜ் செய்யப்பட்டது புத்துணர்ச்சியோடு இருக்கும் இதனாலேயே தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படுகிறது குற்றாலம்.
பொங்கி பிரவாகிக்கும் பேரருவி
மெயின்பால்ஸ் என்று அழைக்கப்படும் பேரருவிதான் குற்றாலத்தில் பிரதானமானதாகும். ஏறத்தாழ 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான துறையில் விழுந்து, பொங்கி பாய்ந்து பரந்து விரிந்து கீழே விழுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனித்தனியாக இங்கு இடமுண்டு.
சிவனுக்கு அபிஷேகம்
இந்த அருவி. இந்த அருவி விழும் பாறைகளில் சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீரில் குளிப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சிற்றருவி
இந்த அருவியில் தண்ணீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.
செண்பகா தேவி அருவி
பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த செண்பகாதேவி அருவி. இந்த அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
செண்பகாதேவி அம்மன் கோவில்
செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது இந்த அருவி. 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் இந்த அருவியின் கரையோரத்தில் செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது.
தேனருவி
செண்பகா தேவி அருவியில் இருந்து 3 கீ.மீ தூரத்தில் உள்ளது தேனருவி. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது. அதிக அளவில் தேன்கூடுகள் காணப்படும். இதனால் தேனருவி என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்த அருவியில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி
பேரருவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது ஐந்தருவியைத்தான். பேரருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவதால் ஐந்தருவி என அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு இரண்டு
இதில், பெண்கள் குளிப்பதற்கென்று ஒரு கிளை அருவியும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக மூன்று கிளை அருவிகளும் உள்ளன. ஐந்தாவது கிளையில் தண்ணீர் வருவது குறைவு. இதில் குழந்தைகள் குளித்து மகிழ்வார்கள்
இந்த அருவிக்கு மேலே பழத்தோட்ட அருவி அல்லது விஐபி அருவி இருக்கிறது. இங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முக்கிய விஐபிக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.
பழைய குற்றால அருவி
இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இது மெயினருவி போல நேரடியாக விழாமல் பாறைகளில் மோதி மெதுவாக பூப்போல வந்து தண்ணீர் விழும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் வந்து இங்கு நீராடிச் செல்கின்றனர். இது பேரருவியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புலி அருவி
செயற்கையாக உருவாக்கப்பட்டது புலிஅருவி இவ்வருவியில் பெரும்பாலும் பெரியவர்களைவிட குழந்தைகள் குளித்து மகிழ்கின்றனர்.
இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது. ஐந்து அருவிக்கு மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.
ஆன்மீகத்தலம்
குளித்து மகிழமட்டுமல்ல குற்றாலம் சிறந்த ஆன்மீகத்தலமும் ஆகும். பேரருவியின் அருகில் பழைய வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இது சங்கு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு இறைவன் பெயர் குறும்பலாநாதர், இறைவியின் பெயர் குழல்வாய் மொழியம்மை. கிபி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும், சம்பந்தரும் இவ்வூரின் இயற்கை வளத்தையும், குற்றாலத்து உறையும் கூத்தனின் பெருமையையும் சிறப்பித்து பாடியுள்ளனர்.
சித்திரசபை
குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் பாதையில் சித்திரசபை உள்ளது. இது இறைவன் திருநடனமாடும் ஐந்து சபைகளில் ஒன்று. மற்ற 4 சபைகளில் நடராஜர் விக்கிரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெறுகின்றதென்று திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
புதுப்பொலிவுடன் ஓவியங்கள்
சித்திரசபைக்கு முன்னர் தெப்பக்குளமும் அதன் மத்தியில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் மிக அழகுடன் விளங்குகிறது. சபையில் நடராஜபெருமான்தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். சித்திரசபையிலுள்ள ஓவியங்கள் வெகுகாலத்திற்கு முன் மூலிகை வர்ணத்தால் தீட்டப்பட்டிருநுதன. பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு இங்கு தீட்டப்பட்டடிருந்த மூலிகை ஓவியங்கள் மங்கியதால் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
நாளை தொடரும்
குற்றால அருவிகளையும், குறும்பலா நாதரையும் இன்றைக்கு தெரிந்து கொண்டீர்கள் இன்னும் பல சிறப்புக்களையும் படிக்க நாளை வரை காத்திருங்கள்.