'அம்மா' ஹெலிகாப்டரும், உசைன் போல்ட் அமைச்சர்களும்...!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவும், அவரது ஹெலிகாப்டரும்.. இந்தத் தலைப்பில் ஒரு படமே எடுத்து முடித்து 100 நாட்கள் ஓட்டி சில்வர் ஜூப்ளி வரைக்கும் போய் விடலாம். அவ்வளவு சுவாரஸ்யங்கள், அதிரடித் திருப்பங்கள், திரில்கள், காமெடி, அதிரடி என எல்லாமே கலந்திருக்கிறது ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார ஹெலிகாப்டர் சமாச்சாரத்தில்.
ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆவதிலிருந்து லேண்ட் ஆவது வரை எத்தனை எத்தனை காட்சிகள், களேபரங்கள்.. நினைத்தாலே கண்ணில் வியர்க்கிறது.
இத்தனைக்கும் ஜெயலலிதாவை விட அவரது அமை்சர்களும், அதிமுக பிரபலங்களும், வேட்பாளர்களும் செய்வதுதான் மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது.
எல்லா ஊர்ப் பஞ்சாயத்துக்கும்...
முதல்வர் ஜெயலலிதா போகும் பிரசாரக் கூட்டத்துக்கெல்லாம் முதல் ஆளாக போய் நிற்பது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட நால்வர் அணிதான். இவர்கள்தான் முதல்வரின் அத்தனை பிரசாரப் பயணங்களுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.
உசேன் போல்ட்டா.. ஓ. பன்னீர் செல்வமா...
முதல்வர் ஜெயலலிதா எந்த ஊரில் வந்து ஹெலிகாப்டரில் இறங்குகிறாரோ, முதலில் வரவேற்பது இவர்கள்தான். ஹெலிபேடுக்கு சற்று தள்ளி நிற்கும் இவர்கள், ஜெயலலிதா ஹெலிகாப்டர் வந்து இறங்கியதும் ஓடுவார்களே பார்க்க வேண்டும்.. உசேன் போல்ட்டுக்கே நட்டு கழன்று போய் விடும்.
வேட்டியை மடிச்சுக் கூட கட்டாம
வேட்டி படபடக்க இவர்கள் மூச்சு வாங்க ஓடுவதைப் பார்த்து அவர்களது வீ்ட்டில் என்ன நினைப்பார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வாசலை நோக்கி பவ்யமாக
ஹெலிகாப்டரை நோக்கி இப்படி வேட்டி படபடக்க ஓடி வரும் அமைச்சர் பெருமக்களும், அவர்களை விட படு வேகமாக ஓடி வரும் வேட்பாளர் பெருமக்களும் ஹெலிகாப்டரின் வாசல் பகுதியை நோக்கி படு பவ்யமாக நின்று கொள்கிறார்கள்.
கை ரெடி... முதுகும் ரெடி...
பின்னர் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கப் போகும் ஜெயலலிதாவுக்குக் கும்பிடு போடுவதற்காக கைகளை கூப்பியபடியும், குணிந்து வணங்குவதற்காக முதுகையும் வளைத்து ரெடியாக வைத்துக் கொள்கிறார்கள்.
வேட்டி பறக்குது பாருங்கோ....
ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போதுதான் செம கூத்து நடக்கிறது. அதாவது ஹெலிகாப்டரின் ராட்சத விசிறி பறப்பதால் கீழே புழுதி கிளம்பும். காற்றும் பலமாக வீசுகிறது. அந்த சமயத்தில் லைனாக அணிவகுத்து கூப்பிய கரங்களுடன் நிறகும் அமைச்சர்கள், அதிமுக பிரபலங்களின் வேட்டிகளும் படு வேகமாக பறக்கிறது. சிலருக்கு ஒரு பக்கமாக வேட்டி விலகியும் விடுகிறது.
அட அது கிடக்குதுப்பா.. அம்மாதானே முக்கியம்
ஆனால் கூப்பிய கரத்தை சற்றும் விலக்காமல், பறக்கும் வேட்டியை சற்றும் பிடிக்காமல், கப்பலேறும் மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தரையிறங்கும் அம்மாவை வணங்குவதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி, 'கான்சென்ட்ரேஷன்' என்றால் என்ன என்பதை ஒரு பாடம் போல தமிழக மக்களுக்கும், உலக மக்களுககும் அழகாக சொல்லிக் காட்டுகிறார்கள் நமது மாண்புமிகுக்கள்..
பேசாம கிளிப் போட்டுக்கலாமே..
இப்படி வேட்டி பறக்கும் காட்சிகளைப் பார்த்தபோது பேசாமல், துணி காயப் போடும்போது கொடியில் துணிகள் மீது போடும் கிளிப்புகளை வாங்கி பாக்கெட்டில் வைததுக் கொண்டு ஹெலிகாப்டர் லேண்டிங்கின்போது மட்டும் கிளிப்பை எடுத்து மாட்டிக் கொண்டால், வேட்டி பறக்காமல் தடுக்க முடியுமே என்ற சிந்தனைதான் வருகிறது.
ஜீரோ டிகிரியிலிருந்து 90 டிகிரி வரை...
பிறகு ஜெயலலிதா ஹெலிகாப்டரை விட்டு வெளியே வந்ததும் அப்படியே முதுகை வளைத்து குணிந்து வணக்கம் வைத்தபடி.. அப்படியே சில நிமிடங்கள் வரை நிற்கிறார்கள். தலை மண்ணைப் பார்க்க.. முதுகு வளைந்து நிற்க.. அவர்கள் நிற்கும் ஸ்டைலே தனி.. அழகு.. அழகு.. அழகு...
குணிந்து கட்டை விரல் வரை
சிலரைப் பார்க்க வேண்டும். அப்படியே ரொம்பக் குணிந்து அவர்களது கட்டை விரலே அவர்களே பார்க்கும் அளவுக்கு ஓவரா குணிந்திருப்பார்கள்.. நிறைய ஏரோபிக்ஸ் செய்து பழக்கம் போல...
அம்மாவுக்கா அல்லது ஆர்ம்ட் போலீஸுக்கா
அடுத்து பாத காணிக்கை. அதாவது அம்மா காலில் விழுந்து வணங்குவது. என்ன காமெடி என்றால் அம்மா அருகில் போவதற்குள்ளாகவே பலர் படார் படாரென்று தரையில் விழுந்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் முதல்வரின் காலுக்குப் பதில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்கள் காலில்தான் போய் பொத்தென்று விழுகிறார்கள்...
கொக்கு பற பற.. அம்மா பற பற
அடுத்து ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வரும்போதும், கிளம்பிப் போகும்போதும், கீழே கூடியிருக்கும் அமைச்சர்கள் உள்பட அனைவருமே வானத்தைப் பார்த்து பறக்கும் ஹெலிகாப்டரை கும்பிட்டபடி நிற்கிறார்கள்.. ஏதோ கருட சேவையன்று கருட தரிசனம் செய்வது போல.
ஒருவேளை அம்மா பார்த்துட்டா
ஒரு வேளை பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து கீழே நிற்போரில் யாரெல்லாம் கும்பிடாமல் இருக்கிறார்கள் என்று அம்மா பார்த்து நோட் பண்ணி விடுவாரோ என்று பயந்து இப்படிச் செய்கிறார்களா என்று தெரியவி்ல்லை.
நிறைய பேசிக் கொண்டே போகலாம்.. அம்புட்டு அமர்க்களமாக இருக்கிறது அதிமுகவினரின் செயல்களைப் பார்க்கும்போது!