'ஜட்ஜ்' முருகனின் தீர்ப்பைத் தொடர்ந்து.. திருச்செந்தூர் முருகனை சந்திக்கக் கிளம்பினார் ஜெயேந்திரர்!
காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு சொன்ன உடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஜெயேந்திரர் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனை வரும் விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்கள் அனைவரும் ஜெயேந்திரரிடம் பேட்டி காண சென்றனர். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் கையசைத்தபடியே சென்றார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, தீர்ப்பு வெளியாவதையொட்டி ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறினர்.
தீர்ப்புக்கு பின்னர் நீதிமன்ற நெறிமுறைகள் முடிந்த பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் ஜெயேந்திரர் மட்டும் தனி காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் ஜெயேந்திரர் நாளை மாலை திருப்பதி புறப்பட்டு செல்கிறார். அங்கு வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் முடித்து காஞ்சி சங்கரமடத்துக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. விஜேயந்திரர் தீர்ப்பு வெளியான உடனே காஞ்சி மடத்துக்கு திரும்பினார்.
தீர்ப்பு சொன்ன நீதிபதியின் பெயர் முருகன். கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்க சென்றாரோ ஜெயேந்திரர்?.