தமிழகத்தில் ஊடுருவிய ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்... தேடும் பணியில் புலனாய்வு பிரிவு மும்முரம்
சென்னை: தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளான தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந் தேதி சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில், இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை, மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அருண் செல்வராசனிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் வழியாக மும்பை நகருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது போல், சென்னை நகருக்குள் கடல் வழியாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து, தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் சதித் திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.
இந்தியாவில், அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. இந்நிலையில் உளவாளிகள் அளித்த வாக்குமூலம் மற்றும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உளவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
அருண் செல்வராசன், ஜாகீர் உசேன் ஆகிய 2 உளவாளிகளும் தெரிவித்திருக்கும் தகவல்களின் அடிப்படையாகக் கொண்டு இந்த உளவாளிகளின் பட்டியல் தயாராகி வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழக போலீசாருடன் இணைந்து தேடும் பணிகளை மேற்கொள்கின்றனர்.