தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்க திட்டம்... சிதம்பரமும் ரெடி?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரசாரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதையடுத்து அக்கட்சியால், தோல்வி அறியும் குழு ஏற்படுத்தப்பட்டு, மாநிலவாரியாக தோல்விக்கான காரணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழக நிர்வாகிகள் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கடந்த 3ம்தேதி மேலிட தலைவர் ஏ.கே.அந்தோணி தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தமிழகத்து தோல்வி ஏன் என கேட்டறிந்தார்.
அதிர்ச்சி தோல்வி
அதிலும், கன்னியாகுமரி தொகுதியில் வசந்த் அன்ட் கோ, வசந்தகுமார் அதிர்ச்சி தோல்வியடைந்ததாக ஏ.கே.அந்தோணி வருத்தப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் சிலர் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததுதான் தனது தோல்விக்கு காரணம் என்று வசந்தகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல ஐடியாக்கள்
கட்சியை வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று அந்தோணி ஆலோசனை கேட்டதற்கு ஆளுக்கொரு வகையில் ஆலோசனைகள் கூறியுள்ளனர். தமிழக மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும், கிராமங்களுக்கு சென்று மீண்டும் கட்சியை வளர்க்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மாநிலத் தலைமைக்கு அதிகாரம் வேண்டும், மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளைவிடுத்துள்ளனர்.
வாசனுக்கு எம்.பி பதவி
தலைமையை மாற்ற வேண்டும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்ட ஏ.கே.அந்தோணி அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளார். அந்தோணியிடம் ஏற்கனவே, தமிழகத்தில் கட்சியை வளர்க்கப்போவதாக ப.சிதம்பரம் சொல்லியிருந்தாராம். எனவேதான், ராஜ்யசபா வழியாக சிதம்பரத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சிதம்பரத்தை தலைவராக்கிவிட்டு, அவருக்கு எதிர்கோஷ்டியை சேர்ந்த வாசனை ராஜ்யசபா உறுப்பினராக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சிதம்பரமும் ரெடி?
சிதம்பரமும், 'இதற்கு வசதியாக டெல்லியில் இருந்த தனது வீட்டை காலிசெய்துவிட்டார். அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்த விவரத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கும் சிதம்பரம் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டார். எனவே இனிமேல் தமிழகத்தில் சிதம்பரத்தின் ஆட்டம்தான் அவரது கோஷ்டியினர் மகிழ்ச்சியிலுள்ளனர்.