புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கட்டாரியா அதிரடியாக நீக்கம்!
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் வீரேந்திர கட்டாரியா. புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டபோது அதிரடியாக களத்தில் இறங்கி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நன்மதிப்பை பெற்றார். அதன்பின், மாநில முதல்வர் ரங்கசாமியோடு மோதல் ஏற்பட்டு இருவரும் இருதுருவங்களாக செயல்பட்டு வந்தனர்.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆளுநருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புதுச்சேரியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து என்.ஆர் காங்கிரஸும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்ததும், முதல் வேலையாக டெல்லி சென்ற புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை மாற்றும்படி மத்தியிலுள்ள மூத்த அமைச்சர்களை நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.
ஆட்சியாளர்கள் இப்படி என்றால் புதுவையில் உள்ள சில அமைப்புகள், ஆளுநர் கட்டாரியாவை நேரில் சந்தித்து விரைவில் ராஜினாமா செய்யுமாறு மனு அளித்து அதிர்ச்சிக் கொடுத்தனர். ஆனால், கட்டாரியாவோ தான் ஒருபோதும் ராஜினாமா செய்யப்போவது இல்லை என்று உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு அதிரடியாக நீக்கியுள்ளார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஆளுநர் அஜய் குமார் சிங், புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத்தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.