தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் பராமரிப்பு.. 210 மெ.வாட் மின் உற்பத்தி "அவுட்"!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 1வது யூனிட் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 20 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனால், அதில் உற்பத்தியாகும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகின்றது. இதனால் அவ்வப்போது அனல்மின் நிலையத்தின் கொதிகலன்கள் மற்றும் இயந்திரகோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அதனை தொடர்ந்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி துவங்குவதும் தொடர்கதையாக உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 4வது யூனிட் பராமரிப்பு பணிக்ககாக 45 தினங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. இதனிடையே 4வது யூனிட் பராமரிப்பு பணிக்காக மூன்று தினங்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி துவங்கியது.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தின் 2வது யூனிட்டில் சிறு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதேசமயம், அனல்மின் நிலையத்தின் 1வது யூனிட் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 20 தினங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக 210 மெகாவாட் திறன் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.