"ஞானம்" மீது ஜி.கே.வாசன் கடும் கோபமாமே...
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் இப்போது ஜி.கே.வாசன் அணிக்கும் ப.சிதம்பரம் அணிக்கும் இடையேதான் உக்கிர உட்கட்சி யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஜி.கே.வாசனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் ஜி.கே. வாசன் தலைமையில் நல்லாட்சி அமைத்திடுவோம் என்று வாசன் ஆதரவாளர்கள் திடீர் திடீரென போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
ப.சி. முதல்வர் வேட்பாளர்
பதிலுக்கு சிதம்பரம் கோஷ்டியும், ப.சியைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அத்துடன் வாசன் தரப்பு வெளியிடுகிற ஒவ்வொரு போஸ்டர் குறித்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் மேல் புகாராக அனுப்பியும் கொண்டிருக்கிறது ப.சி. கோஷ்டி
ஞானம் போட்ட தடை
இந்த பஞ்சாயத்தில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் சுவற்றில் போஸ்டர் ஒட்டக் கூடாது, சத்தியமூர்த்தி பவனுக்குள் நோட்டீஸ் எதனையும் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் ஞானதேசிகன் உத்தரவிட்டிருக்கிறாராம்.
கடுப்பில் வாசன் கோஷ்டி
இது ஜி.கே.வாசன் தரப்பினரை எரிச்சலடைய வைத்துள்ளதாம். 'ஞானதேசிகன் நம்ம ஆள்தானே..அவரே எப்படி இந்த மாதிரி உத்தரவிடலாம்" என்று எகிறியபடியே வாசனிடம் முறையிட்டுள்ளனர்.
ஜி.கே.வாசனுக்கு சந்தேகம்
இதனால் ஞானதேசிகன் மீது ஜி.கே.வாசனும் கோபத்தில் இருக்கிறார் என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள். நமக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டே உள்ளடி வேலைகளில் எதுவும் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகமும் ஜி.கே.வாசனுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.