ஒரு இஞ்ச் கேப் போதும்… வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்!
மும்பை: படுக்கை அறையில் உறங்கும் போது தம்பதியர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரு இஞ்ச் மட்டுமே இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தம்பதியர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதை தூங்கும் முறைகள் வெளிப்படுத்துகின்றன என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
எடின்பர்க் சர்வதேச அறிவியல் திருவிழாவில் வெளியிடப்பட்டு உள்ள இந்த ஆய்வு மனநல உளவியலாளர் சாமுவேல் டங்கெல் என்பவரது ஆய்வு முடிவை அடிப்படையாக கொண்டு விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டு உள்ளது.
நெருக்கமான உறக்கம்
ஹெர்போர்டுஷைர் பல்கலை கழகத்தின் உளவியல் பிரிவு பேராசிரியர் ரிச்சர்டு வைஸ்மேன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் 1,100 பேர் கலந்து கொண்டுள்ளனர். தம்பதிகள் இடையேயான நெருக்கம் குறித்த விவரங்களே ஆய்வின் நோக்கம்.
மகிழ்ச்சியான தம்பதிகள்
94 சதவீத தம்பதிகள் இரவு மிக நெருக்கமான முறையில் தூங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும், மற்றவர்களில் 68 சதவீதம் பேரே மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
வேறு வேறு திசையில்
ஆய்வின்படி, 42 சதவீத தம்பதியர்கள் வேறு வேறு திசையை பார்த்தபடியும், 31 சதவீதத்தினர் ஒரே திசையை நோக்கியபடியும் மற்றும் 4 சதவீதத்தினர் ஒருவரையொருவர் பார்த்தபடியும் தூங்குகின்றனர்.
ஒரு இஞ்ச் இடைவெளி
மேலும், ஒருவரையொருவர் தொட்ட நிலையில் 34 சதவீதத்தினரும், 12 சதவீதத்தினர் ஓர் இஞ்ச் இடைவெளி விட்டும் மற்றும் மிக குறைவாக 2 சதவீதம் பேர் 30 இஞ்ச் தொலைவிலும் தூங்குகின்றனர்.
நேருக்கு நேராக
தம்பதிகள் தொட்டு கொண்டு தூங்கும்போது, அதிக மகிழ்ச்சியுடன் இருப்பவர்களில் நேருக்கு நேர் பார்த்தபடி தூங்குபவர்கள் முதலிடமும் அதற்கு அடுத்தபடியாக, ஒரே திசையை நோக்கி தூங்குபவர்கள் அல்லது வேறு வேறு திசைகளை நோக்கி தூங்குபவர்கள் வருகின்றனர்.
யார் மகிழ்ச்சியானவர்
ஒருவரையொருவர் தொடாமல் தூங்குபவர்களில், அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுபவர்களின் தூங்கும் திசையை எடுத்து கொண்டால், ஒரே திசையை நோக்கிய நிலையில் படுத்து தூங்குபவர்கள் முதலிடமும் மற்றும் வேறு வேறு திசைகளில் அல்லது ஒருவரையொருவர் பார்த்தபடி தூங்குபவர்கள் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளனர்.
அதிகம் கோபக்காரர்
தாயின் கருவில் இருப்பது போன்று குறுகிய நிலையில் வளைந்து படுத்து தூங்குவோர், முடிவு எடுப்பதில் சிரமமாக இருப்பவர்களாகவும், அதிக கோபம் கொள்பவராகவும் மற்றும் விமர்சனங்களால் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவராகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முடிவே எடுக்க முடியாது
தூங்கும்போது பாதி வளைந்த நிலையில் அதாவது கால்கள் மடக்கிய நிலையில் தூங்குவோர் சமாதானம் அடையாதவராகவும், முக்கிய முடிவுகள் எடுக்க இயலாதவராகவும் இருக்கின்றனர்.
நம்பிக்கை நாயகர்கள்
தூங்கும்போது ராஜா போன்று தூங்குபவர்கள் என்றால் மேல்நோக்கி பார்த்தபடி தூங்குபவர்கள்தான்.
இவர்கள் மிக நம்பிக்கையுடனும், வெளிப்படையாகவும், விரிவான முறையில் செயல்படுபவராகவும் மற்றும் உணர்ச்சிவசப்பட கூடியவராகவும் இருக்கின்றனர்.
சிறந்த வேலையாளி
முகத்தை கீழ்நோக்கி பார்க்கும்படி கவிழ்ந்து தூங்குபவர்கள் கடினமானவர்களாகவும் மற்றும் வேலையை சிறப்பாக செய்பவராகவும் உள்ளனர்.
மகிழ்ச்சியான தம்பதியர்
ஆய்வின்படி, ஓர் இஞ்ச் இடைவெளியில் தூங்கி அதிக மகிழ்ச்சியுடன் 86 சதவீதம் பேர் இருப்பதாகவும், 30 இஞ்ச் தொலைவில் தூங்கி மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் 66 சதவீதமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.