டாய்லெட்டைக் கழுவ மறுத்த 13 வயது சிறுவனுக்கு அடி: பெங்களூரில் பயங்கரம்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு காப்பகம் ஒன்றில் கழிப்பறையைக் கழுவ மறுத்த சிறுவனை காப்பக பாதுகாவலர்கள் கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரிக்கும் அரசு காப்பகம் ஒன்று உள்ளது. இங்குள்ள சிறார்கள் அவ்வப்போது சுகாதாரப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் 13 வயது சிறுவன் ஒருவனைக் கழிப்பறைகளைக் கழுவித் தூய்மைப்படுத்துமாறு காப்பக பாதுகாவலர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அப்பணியை செய்ய சிறுவன் மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர்கள் பிரம்பு மற்றும் இரும்பு பைப்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் அகு பணியில் இருந்த மற்ற பணியாளர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் கூறுகையில், ‘அவர்கள் அடித்த வலி தாங்க முடியாமல் நான் ஓடிப் போய் காயங்களுடன் டாய்லெட்டைக் கழுவினேன்' எனத் தெரிவித்துள்ளான்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரார்த்தனைக்கு முன்பாக உணவருந்தினான் என்பதற்காக அரசு காப்பகத்து சிறுவன் ஓருவன் காப்பக பாதுகாவலரால் தாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.