சிறையில் மூன்று நாட்களை கடந்த ஜெயலலிதா: முதல் நாளைவிட மலர்ச்சியாக இருக்கிறார்!!
பெங்களூர்: மூன்று நாட்களாக சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முன்பைவிட தற்போது சற்று மலர்ச்சியாக காணப்படுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை முதல், பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள், அதாவது சனிக்கிழமை இரவில், ஜெயலலிதா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு அவர் உணவு எதையும் சாப்பிடவில்லை.
மறுநாள் ஓரளவுக்கு சுதாரிப்புடன் காணப்பட்டாலும், சரியாக சாப்பிடாததால் வாயு பிடிப்பு தொல்லையால் அவதிப்பட்டார். ஆனால் நேற்று பிரச்சினையில்லை. காலை முதல் இரவு வரை அளித்த அனைத்து உணவையும் சாப்பிட்டார்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதா காலையில் 5.30 மணிக்கு எழுந்தார். எழுந்ததும், பால் சாப்பிட்டுவிட்டு, சிறிது நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதன்பிறகு பொங்கலும், சர்க்கரை சேர்க்காத பாலும் சாப்பிட்டார். 3 தமிழ் பத்திரிகைகளையும், 2 ஆங்கில பத்திரிகைகளையும் அவர் படித்தார். தமிழ் செய்தி சேனல்களில் தமிழக நிலவரத்தை பார்த்தார்.
வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக சிறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.