சென்னை கத்திப்பாராவில் விரைவில் “ஏசி” பஸ் ஸ்டாப்!
சென்னை: சென்னையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தமான கத்திப்பாரா ஆர்சர்கானாவில் குளிர்சாதனவசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு நுழைவு பகுதியாக ஆலந்தூர் கத்திப்பாரா உள்ளது. கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் நின்று செல்கின்றன.
இந்தப் பகுதியானது கண்டோண்மென்ட் வசம் உள்ளது. ஆசர்கானா, விமான நிலையம், மீனம்பாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தங்கள் கண்டோண்மென்ட் ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் கண்டோண்மென்ட் போர்டு சார்பில் கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் குளிர்சாதன வசதி, டி.வி, ஏ.டி.எம் வசதிகளுடன் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் செலவில் நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என கண்டோண்மெண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பயணிகளுக்கு பல வகையான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. காசு, பணத்தை மறந்து வந்து விட்டால் கவலையேப்படாமல் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பஸ் வரும் வரை டிவி பார்த்தும் பொழுதைக் கழிக்கலாம். வெயில் காலத்தில் ஜில்லென்று ஏசியில் இருந்தபடி பஸ்ஸுக்காக காத்திருக்கலாம்.