For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியோடு லேடியை ஒப்பிடமுடியாது... நீங்கள் ஒரு ஓ.டி.: வைகோ

By Mayura Akilan
|

மதுரை: மோடி மோடிதான்... லேடி லேடிதான்... மதுவைத் தடுக்கிறார் மோடி, மதுவைத் திணிக்கிறார் லேடி . மோடியோடு ஒருபோதும் லேடியை ஒப்பிட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மோடியை விட இந்த லேடியே சிறந்த நிர்வாக என்று ஜெயலலிதா சொன்னாலும் சொன்னார், எதிர்கட்சிகள் அனைவருக்கும் எடுத்து பேச அது ஒரு நல்ல பாயிண்ட் ஆக போய்விட்டது.

ராமதாஸ்,விஜயகாந்த், ஸ்டாலின் என பலரும் இந்த மோடி, லேடி பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தன் பங்கிற்கு லேடியை விமர்ச்சித்துள்ளார்.

மதுரையில் தேர்தல் பிரச்சார நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ கூறியதாவது:

எதிர்கட்சிகள் கலக்கம்

எதிர்கட்சிகள் கலக்கம்

இந்தத் தேர்தலில் நமது அணி பலமாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். அமைந்து விட்டது. அதனால் திகில் அடைந்து கிடக்கின்றது தி.மு.க. தலைமை, அண்ணா தி.மு.க. தலைமை. அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தன்னலம் அற்றவன்

தன்னலம் அற்றவன்

இன்றைக்குப் பிரச்சாரத்தின் கடைசி நாள். என்னுடைய விருதுநகர் தொகுதியில்தானே பிரச்சாரம் செய்து இருக்க வேண்டும்? இல்லை. நான் தன்னலம் அற்றவன். இந்தக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

தலை கொடுப்பேன்

தலை கொடுப்பேன்

இந்தப் பிரச்சாரப் பயணத்தை தே.மு.தி.க. வேட்பாளருக்காகப் பேசி நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கே வந்து இருக்கின்றேன். இதுதான் என்னுடைய இயல்பு. கழகத் தோழர்களுக்கு இன்று ஒருநாள் முழுவதும் விருதுநகரில் பிரச்சாரம் செய்து இருக்கலாமே என்று வருத்தம்.

நம்பியவர்களுக்காகத் தலை கொடுப்பது எங்கள் வழக்கம். ஜனநாயகத்தை மதிப்பவர்கள் நாங்கள். கலைஞருக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது.

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பகுதியில் நீண்ட காலமாக நீர்மட்டம் உயர்த்தப்படாததால், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், அங்கே பல பணக்காரர்கள் சுற்றுலா விடுதிகளைக் கட்டி விட்டார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்களைக் கட்டி இருக்கின்றார்கள் கோடீசுவரர்கள். இப்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அவை எல்லாம் மூழ்கிப் போகும். ஆகவேதான், அவர்கள்தான் அணையை உடைக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து இருக்கின்றார்கள்.

கிராபிக்ஸ் படம்

கிராபிக்ஸ் படம்

அதற்காக, அணை உடைந்தால் இலட்சக்கணக்கானவர்கள் மடிந்து போவார்கள் என்ற பொய்யான தகவலை, அவ்தார் படம் எடுத்ததுபோல, கிராபிக்ஸ் காட்சிகளாக ஆக்கி, ஐந்து இலட்சம் குறுவட்டுகளில் பதிந்து பரப்பினார்கள். முதல் அமைச்சருடைய இணையதளத்திலேயே ஒளிபரப்பினார்கள்.

என்னை தோற்கடிக்க பணம்

என்னை தோற்கடிக்க பணம்

அந்தப் பணக்காரர்களிடம் இருந்து என்னைத் தோற்கடிப்பதற்காகப் பணம் வந்து இருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் ஏடு எழுதியது. வைகோ மட்டும் அல்ல, தேனி தொகுதியில் அழகுசுந்தரம், தென்காசியில் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடியில் ஜோயல் என இந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்து இருப்பதாக எழுதி இருக்கின்றார்கள். நான் சொல்லவில்லை.

இலங்கை அரசுக்கு ஆதரவு

இலங்கை அரசுக்கு ஆதரவு

இன்னொரு பக்கத்தில், தமிழக அரசியல் ஏட்டில் புகழேந்தி தங்கராஜ் ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றார். இலங்கை அரசு ஆதரவு பெற்றவர்தான் விருதுநகரில் போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளர் என்று ஆதாரங்களோடு எழுதி இருக்கின்றார். அதனால் அந்தத் தமிழக அரசியல் ஏட்டினைப் பல இடங்களில் நேற்றைக்குத் தி.மு.கழகத்தினர் எரித்து இருக்கின்றார்கள். அந்த வேட்பாளருக்குப் புரோக்கர் வேலை பார்ப்பவர் யார்? அன்றைக்குத் தி.மு.க.காரனை வெட்டு குத்து கொல்லு என்று ஏவி விட்ட முன்னாள் அமைச்சர்தான் சொல்லுகிறார்.

கருணாநிதி துரோகம்

கருணாநிதி துரோகம்

கலைஞர் கருணாநிதி அவர்களே, நீங்கள் அண்ணாவின் தம்பியா? தமிழகத்திற்குச் செய்த துரோகம் அல்லவா? பெரியார் பெயரைச் சொல்லும் தகுதி உண்டா? அண்ணா பெயரைச்சொல்ல அருகதை உண்டா?

பயங்கரமான லேடி

பயங்கரமான லேடி

சரி இந்த வழக்கில் நம்முடைய லேடி எப்படி? அவர் ஒரு பயங்கரமான லேடி. இந்த லேடி மோடியோடு மோதுகிறாராம். ஏங்க அவரோடு மோதுகிறீர்கள்? நான் ரொம்பச் சாதாரணமானவன். இரண்டு கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஏன் உயர்த்தவில்லை

ஏன் உயர்த்தவில்லை

நான் ரொம்பச் சின்னவன், நீங்கள் ரொம்பப் பலமான லேடி. நீங்கள் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததே, உடனே நீங்கள் ஏன் உயர்த்தவில்லை? நீங்கள் பென்னி குயிக்குக்கு சிலை வைக்கின்றீர்கள்.

களவாட நினைக்கும் ஜெ

களவாட நினைக்கும் ஜெ

நாங்கள் உழுது பாடுபட்டு விதைத்து, நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டு, உரம் இட்டுக் களை பறித்து, பூச்சிகள் தாக்கி விடாமல் பாதுகாத்து, புதுமணப் பெண் போல் நெற்கதிர்கள் தலைசாய்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ந்து, அறுவடைக்கு நாள் குறித்த நேரத்தில், இரவோடு இரவாக வந்து அறுத்துக் களவாடிக்கொண்டு போகின்ற வேலையை, ஜெயலலிதா நீண்ட நாள்களாகச் செய்து கொண்டு இருக்கின்றார்.

இருவருமே துரோகம்

இருவருமே துரோகம்

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார்; நீங்களும் துரோகம் செய்து இருக்கின்றீர்கள்.

இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் அருமையான தொண்டர்கள். கட்சித்தலைமையைக் கடவுளாகக் கருதுபவர்கள். ஆனால், அந்தத் தலைமைகள் இரண்டும், நாட்டை, இனத்தைப் பாழ்படுத்தி விட்டன.

சமயசஞ்சீவி மோடி

சமயசஞ்சீவி மோடி

இவர்கள் பிடியில் இருந்து எப்போது விடுதலை பெறுவோம்? என்று தமிழக மக்கள் ஏங்கித் தவித்தார்கள். சமய சஞ்சீவியாக நரேந்திர மோடி வந்து சேர்ந்து இருக்கின்றார். நமது அணி பலமாக அமைந்து விட்டது.

நாங்கள் உதிரிக்கட்சிகளா?

நாங்கள் உதிரிக்கட்சிகளா?

அதனால் எரிச்சல்பட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மை எல்லாம் உதிரிக் கட்சிகள்; இவர்களுக்குக் கொள்கையே கிடையாது என்று பேசி இருக்கின்றார். உங்களிடம் என்ன பண்பாடு இருக்கின்றது? நாங்கள் எல்லோரும் நாட்டுக்காக இரத்தம் சிந்தக் கூடியவர்கள். என்னுடைய ஒவ்வொரு தொண்டனும் உயிரைக் கொடுப்பான். எங்களைப் பார்த்து உதிரிக் கட்சி என்கிறீர்களே, இல்லை; நாங்கள் உறுதியான கட்சிகள். காலப்போக்கில் நீங்கள்தான் உதிரிக் கட்சியாகி இருக்கின்ற இடம் தெரியாமல் போகப் போகின்றீர்கள்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம்

எங்கள் நிலையை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். பொது சிவில் சட்டம் என்ற கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. எதிர்க்கின்றோம். அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எந்தக் குழப்பமும் இல்லை; மறுபேச்சுக்கும் இடம் இல்லை.

வாஜ்பாய் காலத்திலேயே இதை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

ஈழம் எங்கள் கொள்கை

ஈழம் எங்கள் கொள்கை

அன்றைக்கு வாஜ்பாய் அரசு வகுத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தில், மேற்கண்ட கருத்துகள் இடம் பெறவில்லை. ஆனால் அது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை. அதுபோல, சுதந்திரத் தமிழ் ஈழம் என்பது எங்கள் கொள்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை கிடையாது.

உளறல் மன்னன் ராகுல் காந்தி

உளறல் மன்னன் ராகுல் காந்தி

சோனியா காந்தி ஏற்பாட்டில் ஆயுதங்களைக் கொடுத்து, இலட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளைப் படுகொலை செய்தார்களே, தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளி சோனியா காந்தி. அந்த காங்கிரஸ் அரசை அகற்றுவதற்காக நாங்கள் இந்தக் கூட்டணியில் சேர்ந்து இருக்கின்றோம். இந்தியாவிலேயே மிகப்பெரிய உளறல் மன்னனாக உலவுகிறார் ஒருவர். உளறிக்கொட்டுகிறார் ராகுல் காந்தி.

10 ஆண்டில் என்ன செய்தீர்கள்

10 ஆண்டில் என்ன செய்தீர்கள்

அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசி இருக்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது ஏன் செய்யவில்லை? அல்லது நீங்கள் கோமாவில் நினைவு இழந்து கிடந்தீர்களா?

சின்னப்பயல் ராகுல்காந்தி

சின்னப்பயல் ராகுல்காந்தி

இந்தியாவின் பிரதமரைப் பார்த்து, ராகுல் காந்தி சொல்லுகிறார் முட்டாள் என்று. மதுரைக்காரர்கள் பாஷையில் சொல்வது என்றால், அவன் கிடக்கிறான் சின்னப்பயல் விட்டு விடுங்கள் என்பார்கள். நம்முடைய சின்னசெல்லம் அப்படித்தான் சொல்லுவார்.

மதுக்கடைகளை மூடுங்கள்

மதுக்கடைகளை மூடுங்கள்

புலிகளுக்கு ஆதரவு தந்தீர்கள் நன்றி. வைத்தியம் செய்தீர்கள் நன்றி. ஈழத்திற்கு ஆதரவு கொடுத்தீர்கள் நன்றி. ஆனால், கருணாநிதி கொண்டு வந்த மதுக்கடைகளை நீங்கள் ஏன் மூடவில்லை? உங்கள் கட்சிக்காரர்களுக்கு மதுக்கடைகளைப் பிரித்துக் கொடுத்தீர்கள். இன்றைக்குச் ஜெயலலிதா மூலைக்குமூலை கடைதிறக்கிறார்.

வரலாறு மன்னிக்காது

வரலாறு மன்னிக்காது

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. நான் நக்கீரன் உலவிய இந்த மதுரையில் இருந்து சொல்லுகிறேன், இவர்கள் மூவரையுமே வரலாறு மன்னிக்காது.

எங்கள் கைகளை வலுப்படுத்துங்கள்

எங்கள் கைகளை வலுப்படுத்துங்கள்

சரி நரேந்திர மோடி பிரதமர் ஆவதால் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடுமா? இல்லை. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் நமது கூட்டணி வென்றால்தான், அவருக்கு எளிதாக இருக்கும். அப்போதுதான் காவிரியில் துரோகம் செய்கின்ற கர்நாடகத்தைத் தட்டிக் கேட்க முடியும். முல்லைப்பெரியாரில் கேரளத்தை எச்சரிக்க முடியும். பாலாறில் ஆந்திரம் தடுப்பு அணை கட்டுவதைத் தடுக்க முடியும். நமது மீனவர்களைச் சிங்களவன் தாக்கினால் சொட்டை எலும்பை முறித்துவிடுவோம் என்று சொல்ல முடியும்.

மோடியா? லேடியா?

மோடியா? லேடியா?

திடீரென நமது முதல்வர் அவர்கள், மோடி ஒன்றும் சாதிக்கவில்லை; இந்த லேடிதான் சாதித்து இருக்கிறேன் என்கிறார்.ஊழலுக்காக நீதிமன்றப் படி ஏறாதவர் மோடி.

நீங்கள் ஊழல் வழக்கில் கோர்ட் படி ஏற வாய்தா கேட்கிற லேடி
அவர் மதுவைத் தடுக்கின்ற மோடி;
நீங்கள் மதுவைத் திணிக்கின்ற லேடி.
குஜராத்தை மின்மயமாக்கியவர் மோடி
இங்கு மின்வெட்டின் மறுபெயர் லேடி
அதுமட்டும் அல்ல, நீங்கள் ஒரு ஓ.டி.ஆகி விட்டீர்கள்.
ஆம்; ஓவர் டூப்ளிசிட்டி. தமிழகத்திற்கு ஓ.டி.யாகி விட்டீர்கள். மோடியை யாரும் சந்திக்க முடியும்.

ஒருவருமே சந்திக்க முடியாது இந்த லேடியை.

ஆதரவு கொடுங்கள்

ஆதரவு கொடுங்கள்

நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. தமிழகத்தின் வாக்காளப் பெருமக்களை இருகரம் கூப்பி வேண்டிக் கேட்கிறேன். இந்தத் தமிழகத்திற்காக நான் ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டு இருப்பேன் என்று கருதுகின்ற மக்களைக் கேட்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பு இனி நமக்கு வராது. ஆதரவு தாருங்கள். 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி முடித்தார் வைகோ.

English summary
Lady is lady, Modi is Modi. There is no doubt about it. Modi is better suited for administrating the country, don’t compare with TamilNadu Lady MDMK general secretary Vaiko told election campaign in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X