விவசாயிகளுக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சி ‘கிஸான்’!
டெல்லி: விவசாயிகள் பயன் பெறும் வகையில் ‘கிஸான்' என்ற பெயரில் தனி சேனல் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 2014-15 பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அதில் விவசாயிகளுக்கென பல சிறப்பு திட்டங்களை அவர் அறிவித்தார். அதில் ஒன்று தான் கிஸான் தொலைக்காட்சி.
விவசாய தொலைக்காட்சி...
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறப்படுகிறது. எனவே, விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகளுக்காகவே புதிய 24 மணி நேர தொலைக்காட்சியை தொடங்க இருப்பதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
கிஸான்...
விவசாயிகளுக்கான இந்தத் தொலைக்காட்சிக்கு ‘கிஸான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், விவசாயம் தொடர்பான பலதரப்பட்ட தகவல்களும் படங்களும் பேட்டிகளும் ஒளிபரப்பப்படும்.
விவசாய நிகழ்ச்சிகள்...
மேலும், பருவ நிலை கணிப்புகள், பயிர்கள், விதைகள் முதலான பல விவரங்களையும் இத்தொலைக்காட்சி வாயிலாக விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். பிரசார் பாரதியுடன் இணைந்து இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப் பட உள்ளது.
24 மணி நேர சேனல்...
இத்தொலைக்காட்சி மூலம் விவசாயிகள் 24 மணி நேரமும் விவசாயம் சார்ந்த பயனுள்ள கருத்துக்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் பிரபா டிவி...
இதேபோல், வடகிழக்கு மாநிலங்களுக்கென 'அருண் பிரபா' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்தார்.