ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரிப்பு
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். 8 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் ஊர்குத்தியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்ததற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார்.
இவருடன், ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா கைது செய்யபப்ட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் இன்றளவும் தொடர்கிறது.
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிமுகவினரின் கொதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.